தூத்துக்குடி: நண்பர்களுடன் குளித்த வாலிபர் ஆற்றில் மூழ்கி சாவு

தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றங்கரை கிராமத்தில் உள்ள வைப்பாற்றில் இறங்கி குளித்தபோது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார்.;

Update:2025-07-24 22:08 IST

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியப்பன். இவரது மகன் பரமசிவன் (வயது 28), கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் தனது நண்பர்களான அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் முரளி(26), நாகராஜ் மகன் ஜெயராம்(25) ஆகியோருடன் ஆற்றங்கரை கிராமத்தில் உள்ள வைப்பாற்றில் குளிக்க சென்றார்.

பரமசிவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் இறங்கி குளித்தார். அப்போது திடீரென பரமசிவன் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் நீந்திச் சென்று, மயக்க நிலையில் தண்ணீருக்குள் இருந்த பரமசிவனை மீட்டனர்.

உடனடியாக அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்