நீலகிரி ரிசார்ட்டுகளில் ஒலிப்பெருக்கி பயன்பாடு? ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது வன விலங்குகளுக்கு தொந்தரவு தரும் என நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.;
சென்னை,
கோடை வாசஸ்தலங்களை கொண்ட நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிவது வழக்கம். வெயில் காலங்களில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் சுற்றுலாவாசிகள் வந்து செல்வார்கள்.
அவர்கள் நீலகிரியில் தங்கும் விடுதி, ரிசார்ட்டுகளில் முன்பதிவு செய்து தங்குவார்கள். இதுபோன்று சுற்றுலா பயணிகள் தங்கும்போது, ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுவது பற்றி சென்னை ஐகோர்ட்டு கேள்வி ஒன்றை இன்று எழுப்பியுள்ளது.
இரவு நேரத்தில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது கொடூரமானது என்றும், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது வன விலங்குகளுக்கு தொந்தரவு தரும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இரவு நேரத்தில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதா? என மாவட்ட ஆட்சியர், வன அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.