வேளாங்கண்ணி கோவில் கொடியேற்றம்: நாகப்பட்டினத்தில் 2 வட்டங்களுக்கு 29-ந்தேதி விடுமுறை
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.;
கோப்புப்படம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஏசுவின் தாயாக கருதப்படும் மாதா, கையில் குழந்தை ஏசுவுடன் காட்சி தருகிறார். இப்பேராலயம் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதங்களையும் சார்ந்த பக்தர்களும் வழிபடும் தலமாக திகழ்கிறது.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கொடியேற்றத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2 வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகப்பட்டினம், கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 29-ம் தேதி விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.