வானிலை மாற்றம் எதிரொலி: நாகை - இலங்கை பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்
நாகை - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கப்பலில் நாள்தோறும் இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், வெளிநாட்டினர் என ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வானிலை மாற்றத்தின் காரணமாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வரும் டிசம்பர் மாதம் வரை நாகை - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனம் அறிவித்து உள்ளது. கப்பலில் செல்ல இரு மார்க்கத்திலும் முன்பதிவு செய்த பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.