சபாநாயகருக்கு எதிரான அ.தி.மு.க. தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது ஏன்? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
சபாநாயகருக்கு எதிரான அ.தி.மு.க. தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது ஏன்? என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.;
தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. சார்பாக சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 66 பேரில், 63 பேர் தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் குரல் வாக்கெடுப்பு மற்றும் எண்ணி கணிக்கும் முறை மூலமாக, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக துணை சபாநாயகர் பிச்சாண்டி அறிவித்தார்.
இந்த நிலையில், சபாநாயகருக்கு எதிரான அ.தி.மு.க. தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது ஏன்? என்பது குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். இதற்கு பதிலளித்த அவர், "தற்போது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த அடிப்படையில் கொறடா உத்தரவை மீறக்கூடாது என்பதற்காக சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன்" என்று தெரிவித்தார்.