"எதற்காக மும்மொழிக் கொள்கையை கடைபிடிப்பதில்லை..?" முதல்-அமைச்சருக்கு தமிழிசை கேள்வி

தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கும் மும்மொழிக் கொள்கையை எதற்காக அரசு பள்ளிகளில் கடைபிடிப்பதில்லை என்று தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.;

Update:2025-02-16 16:25 IST

சென்னை,

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ""They have to come to the terms of the Indian Constitution" என்கிறார் மத்திய கல்வி மந்திரி. மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? என கல்வி மந்திரியால் கூற முடியுமா?

மாநிலங்களால் ஆனதே இந்திய அரசு! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல! "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!

எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்..." என்று தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "தமிழக அரசை பிளாக்மெயில் செய்யவில்லை. தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கும் மும்மொழிக் கொள்கையை எதற்காக அரசுப் பள்ளிகளில் கடைபிடிப்பதில்லை என சொல்லுங்கள்..? தாய்மொழி தமிழைதான் பிரதானமாக கற்பிப்போம் என சொல்கிறோம். அதற்கு உங்கள் பதில் என்ன..? " என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்