போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்காதது ஏன்? சென்னை ஐகோர்ட்டு கேள்வி

இது குறித்து ஆகஸ்டு 19-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-07-31 14:02 IST

சென்னை,

மருத்துவரீதியாக பணியாற்றும் தகுதியை இழக்கும் அரசுத்துறை ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் மருத்துவ ரீதியாக தகுதி இழக்கும் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கும், கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

இந்நிலையில் இதுதொடர்பாக கொள்கை வகுத்து அமல்படுத்த உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழலுக்கு எதிரான தொழிற்சங்க பேரவை சார்பில் சென்னைஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.  ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் நிர்வாக பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் மருத்துவ ரீதியாக தகுதி இழக்கும் போது அவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கும் போது, நேரடியாக பொது போக்குவரத்து வசதிகளை வழங்கும் பணியில் உள்ள போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு இச்சலுகைகள் வழங்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

மேலும் இது சம்பந்தமாக ஆகஸ்டு 19-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத்துறை செயலாளருக்கும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்