காலிலேயே விழுந்த பின்னர் கர்ச்சீப் எதற்கு? - எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்
மாற்றம் என்று சொன்ன அனைவரும் மாறினார்கள், மறைந்து போனார்கள். ஆனால் திமுக மட்டும் மாறவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகிய முப்பெரும் விழா கரூர் கோடங்கிப்பட்டி பை-பாஸ் சாலை பகுதியில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
விழாவில் பெரியார், அண்ணா விருது உள்ளிட்ட விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
2019-ம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் எதிரிகளை எல்லாம் கலங்கடிக்கும் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிப் பயணம் 2026-ம் ஆண்டிலும் நிச்சயம் தொடரும். உங்களைப் போன்ற உடன்பிறப்புகள் இருக்கும் வரை எந்தக் கொம்பனாலும் தி.மு.க.வை தோற்கடிக்க முடியாது.
அதற்காகத்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு' என்று ஒரு பிரசாரத்தை முன்னெடுத்து ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களை இயக்கத்தில் ஒன்றிணைத்திருக்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது காவிக்கொள்கை என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். இரண்டாயிரம் ஆண்டுகளாக அந்தக் கொள்கைக்கு எதிராக திராவிடம் போராடிக்கொண்டு இருக்கிறது. அந்தக் கொள்கையின் அரசியல் முகமான பாஜக அரசுடன் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறோம்.
கடந்த அதிமுக ஆட்சியை காப்பாற்றியதே பாஜகதான் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உண்மையைப் பேசியிருக்கிறார். அந்தக் கைப்பாவை அரசை, தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறிய திமுகதான் காரணம் என்று நம்மீது வன்மத்தை கொட்டியும், தொடர்ந்து இவ்வளவு குடைச்சலும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து பயந்து முடங்கி விடுவோம் என்று நினைத்தார்கள்.
தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்த அனைத்து கட்சிகளுமே தி.மு.க.வை அழிப்போம், ஒழிப்போம் என்று சொன்னார்கள். திமுகவிற்கு நாங்கள்தான் மாற்று என்று கூறுவோர், என்ன மாற்றப்போகிறார்கள்? மாற்றம் என்று சொன்ன அனைவரும் மாறினார்கள், மறைந்து போனார்கள். ஆனால் திமுக மட்டும் மாறவில்லை.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, எவ்வளவோ நெருக்கடியில் வந்தோம். ஆனால் எந்த மாநில அரசும் செய்யாத அளவுக்கு, ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி முதன்மை மாநிலமாக முன்னேற்றி இருக்கிறோம். இதனால்தான் திராவிட மாடல் அரசை பார்த்தால் சிலருக்கு வயிறு எரிகிறது. வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எதையும் செய்யாமல், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தெம்போ திராணியோ இல்லாமல், அடிமை சாசனம் எழுதி கொடுத்தார். பாஜக தன்னுடன் இருக்கிறது என்று இப்போதும் வாய்த் துடுக்கோடு பேசி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பே இல்லாமல் தரம் தாழ்ந்து, என்னை ஒருமையில் பேசிக்கொண்டு இருக்கிறார். கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் அவரது தரத்தை மக்களே எடை போட்டுக்கொள்வார்கள் என்று நானும் விட்டுவிட்டேன்.
‘ரெய்டு’களில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அதிமுகவை அடகு வைத்திருக்கிறார். திராவிடம் என்றால் என்ன? என்று கேட்டபோது, அதெல்லாம் தனக்கு தெரியாது என்று சொன்ன அவர், அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அதுதான் வெட்கக்கேடு. அதிமுகவை தொடங்கியபோது ‘அண்ணாயிஸம்' என்று சொன்னார்கள். அதை இப்போது எடப்பாடி பழனிசாமி ‘அடிமையிஸம்' என்று மாற்றி, ‘அமித்ஷாவே சரணம்' என்று மொத்தமாக சரண்டர் ஆகிவிட்டார். முழுமையாக நனைந்த பின்னர் முக்காடு எதற்கு? என்று கேட்பதைப்போல, டெல்லியில் கார் மாறிமாறிப் போன பழனிசாமியைப் பார்த்து “காலிலேயே விழுந்த பின்னர் முகத்தை மூட கர்ச்சீப் எதற்கு?” என்று கேட்கிறார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுகிறார்கள். மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகள் அனைத்தையும் துணிச்சலாக நேருக்கு நேராக எதிர்கொள்கிறோம். கவர்னரை வைத்து முடக்க நினைத்தால், சட்டரீதியாக அதை எதிர்த்து நிற்கிறோம். இப்படி, போராடிப் போராடி தமிழர்களை தலை நிமிர்த்துகிறோம். இப்படி தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை ஒருநாளும் தலைகுனிய விடமாட்டோம்.
டெல்லி நம்மீது எப்படியெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்? இந்தி மொழியை திணிக்கிறார்கள். நீட் தேர்வில் இருந்து விலக்கு தர மறுக்கிறார்கள். கல்வி நிதியை கூட விடுவிக்க மறுக்கிறார்கள். கீழடியின் தொன்மையை மறைக்கிறார்கள். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் வாக்குரிமையையே பறிக்கிறார்கள்.
எந்நாளுமே அடக்குமுறைக்கு இங்கு ‘நோ என்ட்ரி’தான். பாஜகவுக்கும் ‘நோ என்ட்ரி’. 3 முறை மத்தியில் தொடர்ந்து ஆட்சி அமைத்தும், தமிழ்நாட்டில் மட்டும் உங்களுடைய மோடி மஸ்தான் வேலை பலிக்கவில்லையே. இன்னுமா எங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை? எத்தனையோ பேர் உயிரை தியாகம் செய்து பெற்றுத் தந்த உரிமைகள் அனைத்தும், நம் கண் முன்னே பறிபோக அனுமதிக்கலாமா?
இப்போது நாம் முன்னெடுக்கும் போராட்டம் ஒரு கட்சிக்கு, முதல்-அமைச்சர் பதவிக்கு, ஆட்சிக்கான போராட்டம் அல்ல. இது தமிழ்நாட்டுக்கான போராட்டம். இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் திரள வேண்டும். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.