கணவருடன் ஏற்பட்ட தகராறில் வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை
கணவருடன் ஏற்பட்ட தகராறில், வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.;
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே செங்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்கால் மதகில், 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பிணம் சிக்கி இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, அந்த பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்தவர், கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சோத்துப்பட்டியான் தோட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி மகேஸ்வரி (35 வயது) என்று தெரிய வந்தது. சம்பவத்தன்று, செந்தில்குமாருக்கும், மகேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், கணவருடன் கோபித்துக் கொண்ட மகேஸ்வரி, தனது மகள் கனிஷ்கா ஸ்ரீயுடன் (3 வயது), தாய் வீடான சூலூர் வேலப்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு ஸ்கூட்டரில் சென்றதாக தெரிகிறது.
ஆனால் அவர் தனது தாய் வீட்டுக்கு செல்லாமல், சுல்தான்பேட்டை அருகில் செல்லும் பி.ஏ.பி. கால்வாய்க்கு வந்தார். பின்னர் ஸ்கூட்டரை வாய்க்கால் கரையில் நிறுத்தி விட்டு, வாய்க்காலில் குதித்து உள்ளார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. ஆனால் குழந்தை கனிஷ்கா ஸ்ரீ என்ன ஆனது என்று தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.