கல்லிடைக்குறிச்சி அருகே திருமணமான 10 மாதங்களில் இளம்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
திருமணமான 10 மாதங்களில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
கோப்புப்படம்
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளம் ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கும், கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா (21 வயது) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. பின்னர் கிருத்திகா வைராவிகுளத்தில் கணவர் சேகர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 4 மாதங்களாக பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கிருத்திகா வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.
உடனே அவரை கல்லிடைக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கிருத்திகா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 10 மாதங்களில் கிருத்திகா தற்கொலை செய்ததால் உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.