தூத்துக்குடியில் கத்தியை காட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது
திருச்செந்தூர் ரோடு சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த வாலிபரை அங்கே பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றனர்.;
தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3வது தெருவைச் சேர்ந்த ஜோதிமணி மகன் ஜார்ஜ் (வயது 51), கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 22ம் தேதி மாலை திருச்செந்தூர் ரோடு சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.8 ஆயிரம் ஆகும்.
இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் ஜார்ஜ் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் திருமுருகன் விசாரணை நடத்தி, தூத்துக்குடி மேலசண்முகபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த சங்கர் மகன் சேர்மகுமார்(24) என்பவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தார்.
மேலும் அவருடன் வந்த மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் ஏற்கெனவே தூத்துக்குடி மேலசண்முகபுரம் இரண்டாவது தெருவில் வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒருவரிடம் செல்போனை பறிக்க முயன்றதாகவும், அவர் சுதாரித்ததால் அவரிடமிருந்து செல்போனை பறிக்க முடியவில்லை என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.