தென்காசி: இளைஞர் தலை துண்டித்து படுகொலை: மனைவி கண்முன்னே நடந்த கொடூரம்
தென்காசியில் மனைவி கண்முன்னே இளைஞர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
தென்காசி மாவட்டம் காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் குத்தாலிங்கம் (32 வயது). இவர் கீழப்புலியூர் பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் குத்தாலிங்கம் தனது மனைவியுடன் கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த 4 பேர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
மேலும் தலையை துண்டித்து அவரது சொந்த ஊரான காசிமேஜர்புரத்தில் கொண்டு வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குத்தாலிங்கத்தின் சகோதரர் ஒரு கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக குத்தாலிங்கம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவரின் உடல் மற்றும் தலையை மீட்ட போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.