விழுப்புரம்: பைக்கில் வேகமாக சென்ற இளைஞர்கள் - குறுக்கே வாகனம் வந்ததால் பரிதாபம்
குறுக்கே வாகனம் வந்ததால் பைக் கட்டுப்பாட்டை இழந்து அதி வேகமாக சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.;
விழுப்புரம்,
விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் கே.டி.எம். பைக்கில், தலைக்கவசம் இல்லாமல் அதிவேகமாக பயணித்த விழுப்புரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இன்று மாலை 6:30 மணி அளவில் கோலியனூர் கூட்ரோடு அடுத்த நல்லரசன்பேட்டை பகுதியில் பயணித்தபோது சாலை குறுக்கே வாகனம் வந்ததால் வலது புறமாக திருப்பும் போது இரு சக்கர வாகன கட்டுப்பாட்டை இழந்து அதி வேகமாக சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் விழுப்புரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் (வயது 21) மற்றும் விழுப்புரம் மணிநகர் நான்காவது தெருவை சேர்ந்த கார்த்திக் (21) ஆகிய இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய பைக் சுக்கு நூறாக நொறுங்கியர்.
சம்பவம் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு வளவனூர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று இருவரது உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். சாலையில் அதிவேகமாக பைக்கில் பயணித்தது தான் விபத்துக்கு காரணம் என முதல் கட்ட விசாரணை தெரிய வருகிறது. மேலும் விபத்து குறித்து வளவனூர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்