கனடாவில் 20 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொலை
மாணவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.;
ஒட்டாவா,
கனடா நாட்டின் ஹைலேண்ட் கிரீக் டிரெயில் பகுதியில் உள்ள டொரோண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகம் அருகே, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் மாணவர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த மாணவரின் பெயர் சிவாங்க் அவாஸ்தி(வயது 20) என்பதும், அவர் இந்தியாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய நிலையில், போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்திய மாணவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும், மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.