அமெரிக்காவுக்கு படையெடுக்கும் ஐரோப்பிய தலைவர்கள்..?

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாளை சந்திக்கிறார்.;

Update:2025-08-17 17:21 IST

அலாஸ்கா,

சர்வதேச ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்தது. இதனால் தங்கள் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய ரஷியா அதனை கடுமையாக எதிர்த்தது. உக்ரைன் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். இதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி நேற்று முன்தினம் அமெரிக்காவின் மத்திய மாகாணமான அலாஸ்காவில் இருநாட்டு தலைவர்களும், பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டரை மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஷிய அதிபர் புதின், "இந்த பேச்சுவார்த்தை முன்பே நடந்திருக்க வேண்டும். தாமதமாக நடந்துள்ளது. ஆனாலும் இது சரியான நேரம். அப்போது ஜோபைடன் இடத்தில் டிரம்ப் இருந்திருந்தால், உக்ரைன் போர் ஏற்பட்டு இருக்காது. இப்போது ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது.

எங்களது பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. முடிவு எட்டவேண்டுமானால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நான் பேச வேண்டும். அவர் உடன்பாட்டுக்கு ஒத்துக்கொண்டால் அனைத்தும் முடிவுக்கு வரும். இனி எல்லாம் ஜெலன்ஸ்கியின் கையில் உள்ளது என்றார்." என்றார்.

இதையடுத்து உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இடையே நடந்த பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்தது குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:-

போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த வாஷிங்டனில் நாளை (திங்கட்கிழமை) டிரம்பை சந்திக்கிறேன். அப்போது போர் நிறுத்தம் குறித்து விரிவாக விவாதிப்போம். இந்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகளும் இடம் பெற வேண்டும். அப்போதுதான் உக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார். தொடர்ந்து அவர் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடனும் பேசியதாக கூறினார்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நாளை நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தையில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். பேச்சுவார்த்தை ஐரோப்பிய நாடுகள் இடம்பெற வேண்டும் என்று ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்த நிலையில், அழைப்பை ஏற்று ஐரோப்பிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்