டிரம்பின் காசா அமைதி திட்டத்திற்கு பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் ஆதரவு

ஹமாஸ் சம்மதிக்கவில்லை என்றால், பேரழிவை சந்திக்க நேரிடும் என்று நெதன்யாகு எச்சரித்து உள்ளார்.;

Update:2025-09-30 06:16 IST

வாஷிங்டன் டி.சி.,

காசா மீது ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு நேற்று சென்றார். காசா போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ள சூழலில், இது பரபரப்பாக பார்க்கப்பட்டது. அப்போது, வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்த டிரம்ப், காரில் இருந்து வெளியே வந்த நெதன்யாகுவை கைகுலுக்கி வரவேற்றார்.

நடப்பு ஆண்டில் 4-வது முறையாக நெதன்யாகு அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அவர், டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ளை மாளிகையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் தரப்பட்டது. இதனால் காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

எனினும், காசா மற்றும் மேற்கு கரை பகுதியை தன்வசம் எடுத்து கொள்ளும் முடிவில் நெதன்யாகு இருக்கிறார் என கூறப்படுகிறது. காசாவை வருங்காலத்தில் யார் நிர்வகிப்பது? என்பது பற்றியும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காசா விவகாரத்தில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன் என செய்தியாளர்களிடம் பேசும்போது டிரம்ப் கூறினார்.

இந்த சூழலில், காசா போர் முடிவுக்காக, டிரம்ப் மேற்கொள்ளும் முடிவை ஹமாஸ் அமைப்பு ஏற்க வேண்டும் என்று அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இதேபோன்று டிரம்ப் முடிவுக்கு நெதன்யாகு ஆதரவு தெரிவித்தபோதும், அதற்கு ஹமாஸ் சம்மதிக்கவில்லை என்றால், பேரழிவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கையும் வெளியிட்டார்.

டிரம்புக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் ஆதரவாக நிற்கின்றன. எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கின்றன. அவற்றுடன் கூட இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய உலகின் இரு பெரும் முஸ்லிம் நாடுகளும் இதற்கு ஆதரவை வெளிப்படுத்தி உள்ளன.

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு என்ன வழிகள் உள்ளனவோ அவற்றை மேற்கொள்ள டிரம்ப் முழு அளவில் தயாராக இருக்கிறார் என எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்