பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி; வைரலான வீடியோ
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடப்படவில்லை.;
மணிலா,
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது. இதனால் நகரில் உள்ள பல கட்டிடங்கள் குலுங்கின. அதேபோல் செபு மாகாணம் டான்பன்டயன் நகரில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயமும் நிலநடுக்க பாதிப்புக்கு இலக்கானது.
வண்ண விளக்குகளால் ஆலயம் நன்றாக அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்த நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டதும் அது பலத்த சேதமடைந்தது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. பல்வேறு இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இதனால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் பலியானார்கள். அவர்கள் யாரென்று உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.
கடலோர பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டது. எனினும், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடப்படவில்லை. அதற்கான தேவை எதுவும் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.