அமெரிக்காவை புரட்டிப்போடும் பனிப்புயல்; அவசரநிலை பிரகடனம்
பனிப்பொழிவு காரணமாக அந்த நாட்டில் சுமார் 9 லட்சம் வீடுகளுக்கு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின.;
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி இந்தாண்டு பிப்ரவரி இறுதிவரை குளிர்காலம் இருக்கும். கடந்தாண்டு டிசம்பரில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி அங்கு பனிப்பொழிவு குறைந்தபாடில்லாமல் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் அட்லாண்டிங் பெருங்கடல் அருகே பனிப்புயல் ஒன்று புதிதாக உருவானது. மேற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில் தாக்கி வரும் இந்த புயலுக்கு பெர்ன் என பெயர் வைத்து அந்த நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் கண்காணித்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக அமெரிக்காவின் கிழக்கு டெக்சாஸ் தொடங்கி வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, ஹட்சன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த பனிப்பொழிவு காரணமாக வானிலை மையம் நியூ மெக்சிகோ தொடங்கி நியூ இங்கிலாந்து வரையில் உள்ள 14 கோடி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கு தடைவிதித்துள்ளது.
பனிப்புயலின் கோர தாண்டவம் காரணமாக தெற்கு கரோலினா, விர்ஜீனியா, ஜியோர்ஜியா, வடக்கு கரோலினா, மாரிலாந்து, கென்டக்கி உள்ளிட்ட 12 மாகாணங்களுக்கு அவசரநிலை பிரகடனம் அறிவித்து அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.
பெர்ன் பனிப்புயல் காரணமாக அதிகப்பட்சமாக பென்சில்வேனியா மற்றும் ஹட்சன் பள்ளத்தாக்கில் 63 செ.மீ வரை பனிக்கொட்டியது. அந்த நாட்டின் மிக முக்கிய நகரமான நியூயார்க்கில் 25 செ.மீ வரை பனி கொட்டியது. இதனால் அந்த நாட்டின் பல முக்கிய இடங்கள் வெள்ளை போர்வை போர்த்தியதுபோல காட்சியளித்தன.
இந்த பனிப்பொழிவு காரணமாக அந்த நாட்டில் சுமார் 9 லட்சம் வீடுகளுக்கு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. பனிப்புயல் காரணமாக வெளிநாடுகள் மற்றும் உள்ளூர்களுக்கு இயக்கப்படவிருந்த 11,500 விமானங்கள் ரத்தாகின. இந்த பனிப்புயல் காரணமாக பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் அங்கு உயிரிழந்தனர்.
ஆபாத்தான குளிர், கடும் உறைபனி, பனிமழை மேலும் பல நாட்கள் நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது. அமெரிக்காவில் முன் எப்பொதும் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு நிலவுதால் அங்கு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.