2வது டி20: இலங்கையை 94 ரன்னில் சுருட்டி அபார வெற்றி பெற்ற வங்காளதேசம்
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி வரும் 16ம் தேதி நடக்கிறது.;
Image Courtesy: @ICC
தம்புல்லா,
வங்காளதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முதலாவது ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி தம்புல்லாவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் குவித்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 76 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 178 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இலங்கை அணி, வங்காளதேச வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக இலங்கை அணி 15.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 94 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 83 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 32 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட் வீழ்த்தினார். இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி வரும் 16ம் தேதி நடக்கிறது.