4-வது டெஸ்ட்: பும்ரா இல்லையென்றால் அவர்தான் சரியான தேர்வு - ரகானே கருத்து
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.;
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.
தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த மிக முக்கியான போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? என்பதில் பெரிய கேள்வி நிலவுகிறது. ஏனெனில் இந்த தொடரின் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதல் மற்றும் 3-வது போட்டிகளில் அவர் விளையாடி விட்டதால் மீதமுள்ள 2 போட்டிகளில் எந்த ஒன்றில் விளையாடுவார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்வியில் நிலவுகிறது.
இந்நிலையில் 4-வது போட்டியில் பணிச்சுமை காரணமாக ஒருவேளை பும்ரா ஓய்வெடுத்தால் அவருக்கு மாற்றுவீரராக அர்ஷ்தீப் சிங்தான் சரியான தேர்வாக இருப்பார் என்று ரகானே தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பும்ரா விளையாடவில்லை என்றால், அர்ஷ்தீப்தான் சரியான வீரர். நான் அப்படித்தான் நினைக்கிறேன். ஏனென்றால் இங்கிலாந்தில், பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யக்கூடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேவை, வித்தியாசமான கோணத்தில் பவுலிங் செய்யக்கூடிய அவரால் இந்திய அணிக்கு உதவ முடியும். எனவே, பும்ரா விளையாடவில்லை என்றால், அர்ஷ்தீப் விளையாட வேண்டும்" என்று கூறினார்.