பெண் நடுவருடன் வாக்குவாதம்: ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அபராதம்... எவ்வளவு தெரியுமா..?
அஸ்வின் தற்போது டி.என்.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார்.;
சென்னை,
9-வது டி.என்.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த திருப்பூர் கேப்டன் சாய் கிஷோர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 16.2 ஓவர்களில் 93 ரன்களில் சுருண்டது.
அந்த அணியில் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் (18 ரன்), ஷிவம் சிங் (30 ரன்), ஜெயந்த் (18 ரன்) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர். திருப்பூர் தரப்பில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் இசக்கிமுத்து 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டும் வழங்கி 4 விக்கெட்டுகளை அள்ளினார்.
அடுத்து களம் இறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 11.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. விக்கெட் கீப்பர் துஷர் ரஹேஜா 64 ரன்கள் (39 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார்.
இந்த ஆட்டத்தில் இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 18 ரன்களில் சாய் கிஷோர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.
ஆனால் பந்து லெப்ட் சைடுக்கு வெளியே பிட்ச் ஆகி அஸ்வினின் காலில் படுவதுபோல் தெரிந்தது. இதற்கு அவுட் தர மாட்டார்கள் என அஸ்வின் நினைக்க, களத்தில் இருந்த பெண் நடுவர் கிருத்திகா அவுட் வழங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த அஸ்வின் நடுவர் கிருத்திகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால் நடுவர் கிருத்திகா இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் சென்று விட்டார். டிஆர்எஸ் வேறு இல்லை என்பதால் அஸ்வின் கோபத்தில் பேட்டை தனது காலில் அடித்து விட்டு சென்றுவிட்டார். அத்துடன் கையுறைகளையும் கழற்றி வீசினார்.
இந்நிலையில் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.