ஆசிய கோப்பை: யுஏஇ அணியை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது.;
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.
போட்டியின் 2-வது நாளான இன்று துபாயில் நடைபெற்ற 2-வது லீக்கில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியில் தொடக்க வீரர்களாக அலிஷான் ஷரபு, முகமது வசீம் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் முறையே 22 ரன்கள் மற்றும் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் 13.1 ஓவர்களில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஷிவம் துபே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடி, பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். அபிஷேக் ஷர்மா 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் 4.3 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் 20 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.