வங்காளதேசத்துக்கு எதிரான தோல்வி: பிட்ச் மீது அதிருப்தி தெரிவித்த பாக்.பயிற்சியாளர்

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.;

Update:2025-07-21 16:33 IST

மிர்புர்,

வங்காளதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது போட்டி மிர்புரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 110 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பஹர் ஜமான் 44 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், முஸ்தாபிஜூர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 111 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பர்வேஸ் ஹூசைன் எமோன் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்சா 2 விக்கெட்டும், அப்பாஸ் அப்ரிடி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். வங்காளதேச பேட்ஸ்மேன் பர்வேஸ் ஹூசைன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் இந்த தோல்விக்கு பிட்ச்தான் காரணம் என்று பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த பிட்ச் யாருக்கும் ஏற்றதாக இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பைக்கு அணிகள் தயாராக முயற்சிக்கின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இது போன்ற பிட்ச் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதே சமயம் நாங்கள் பேட்டிங் செய்த விதத்திற்கு எந்த சாக்கும் சொல்ல முடியாது. ஆனால் இந்த பிட்ச் சர்வதேச தரத்திற்கு ஏற்றதாக இல்லை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்