மும்பைக்கு எதிரான தோல்வி... சென்னை கேப்டன் தோனி கூறியது என்ன..?

மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோல்வி கண்டது.;

Update:2025-04-21 07:35 IST

Image Courtesy: @IPL / @ChennaiIPL / @mipaltan

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 15.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்தனர்.

இந்நிலையில், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் சென்னை கேப்டன் தோனி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பேட்டிங்கில் நாங்கள் சராசரிக்கும் குறைந்த ரன்களையே சேர்த்திருந்தோம். நிச்சயமாக 2வது இன்னிங்ஸின் பாதியில் பனிப்பொழிவு வரும் என்பது தெரியும். உலகில் இன்று மிகச்சிறந்த டெத் பவுலராக பும்ரா இருக்கிறார். மும்பை அணி டெத் பவுலிங்கை கொஞ்சம் விரைவாகவே தொடங்கிவிட்டது.

சி.எஸ்.கே அணி விரைவாக ரன்களை சேர்க்க தவறிவிட்டது. மிடில் ஓவர்களில் இன்னும் ரன்களை சேர்த்திருக்க வேண்டும். ஆயுஷ் மாத்ரே கொடுத்த தாக்கத்தை அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்திருக்க வேண்டும். ஆயுஷ் மாத்ரேவை பொறுத்தவரை மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினார். அவரின் ஷாட்களை சிறப்பாக செயல்படுத்தினார்.

நாங்களும் அவரின் ஆட்டத்தை பெரிதாக பார்த்ததில்லை. மும்பை அணி வீரர்கள் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொண்டார்கள். நாங்கள் சராசரி ஸ்கோரையே அடிக்கவில்லை என்ற போது, அதிக சிக்சர்களை விட்டுக் கொடுத்தால், ஆட்டம் நம் கைகளில் இருக்காது.

இத்தனை சீசன்களாக .அணி சிறப்பாக செயல்பட்டதற்கு, நல்ல கிரிக்கெட்டை ஆடியதே காரணம். நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாடாதபோது முக்கியமானது என்னவென்றால், அதைப் பற்றி அதிகம் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும்.

அடுத்தடுத்து வரும் போட்டிகளில் சரியான கிரிக்கெட்டை ஆடுகிறோமா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். சில கேட்ச்கள் பிடித்திருந்தால், முடிவுகள் மாறி இருக்கும். தற்போது சி.எஸ்.கே அணியில் உள்ள குறைகளை சரி செய்து வருகிறோம். அடுத்து வரும் 6 போட்டிகளில் வெல்ல முயற்சிப்போம். ஒருவேளை முடியவில்லை என்றால், அடுத்த சீசனுக்கான பிளேயிங் லெவனை கட்டமைக்க தயாராவோம். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்