8 விக்கெட்டுகளை இழந்த இந்தியா.. பேட்டிங் செய்ய களமிறங்காத கேப்டன் சூர்யகுமார் யாதவ்.. காரணம் என்ன..?
ஆசிய கோப்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஓமன் அணிகள் மோதின.;
அபுதாபி,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனுடன் (ஏ பிரிவு) மோதியது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 56 ரன்கள் அடித்தார். ஓமன் தரப்பில் ஷா பைசல், ஜிதன் ராமநந்தி, ஆமிர் கலீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஓமன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்றது. ஓமன் அணியில் அதிகபட்சமாக ஆமீர் கலீம் 64 ரன்களும், ஹம்மது மிர்சா 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஹர்திக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்த போதிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. இதற்கான காரணம் என்னவெனில், இந்த ஆட்டத்திற்கு முன்பாகவே இந்திய அணி சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. எனவே சூப்பர்4 சுற்றுக்கு முன்பாக இந்திய அணியின் பேட்டிங் பலத்தை சோதிக்க மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அவர் கடைசி வரை களம் இறங்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது.