ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்க விட்ட முகமது நபி.. வீடியோ வைரல்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.;
image courtesy:PTI
அபுதாபி,
8 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்றிரவு நடந்த ‘பி’ பிரிவின் கடைசி லீக்கில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மல்லுகட்டின.
அடுத்த சுற்றுக்கு (சூப்பர்4) முன்னேற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முகமது நபி 60 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா 4 விக்கெட் சாய்த்தார்.
இந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 79 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து (12.1 ஓவர்) தடுமாறியது. இந்த சூழலில் சிறப்பாக பேட்டிங் செய்த முகமது நபி அணியை காப்பாற்றினார்.
குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் வெல்லாலகே வீசிய கடைசி ஓவரில் (20வது ஓவர்) தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ரன் அவுட் ஆனார். 22 பந்துகளை எதிர்கொண்ட முகமது நபி 6 சிக்சர்களுடன் 60 ரன்கள் அடித்தார்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது. குசல் மென்டிஸ் (74 ரன், 52 பந்து, 10 பவுண்டரி), குசல் பெரேரா (28 ரன்), கமிந்து மென்டிஸ் (26 ரன்) வெற்றிக்கு உதவினர்.