3வது ஒருநாள் போட்டியில் வெற்றி: தொடரை வென்ற பாகிஸ்தான்

ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தான் வென்றுள்ளது.;

Update:2025-11-08 21:09 IST

லாகூர்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானும், 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றிபெற்றது.

இந்நிலையில், ஒருநாள் தொடரை கைப்பற்றுவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஆட்டம் பைசலாபாத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பிரிட்டோரியஸ் , டிகாக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரிட்டோரியஸ் 39 ரன்களிலும், டிகாக் 53 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த வீரர்கள் பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியில் 37.5 ஓவரில் தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் வீரர் அப்ரர் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் தொடக்க வீரர்களாக பகர் சமான், சைம் அயூப் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே சமான் ரன் எதுவும் எடுக்காமல் (0 ரன்) அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து களமிறங்கிய பாமர் அசாமுடன் ஜோடி சேர்ந்த சைம் அயூப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாபர் அசாம் 27 ரன்னில் அவுட் ஆனார். சைம் அயூப் 77 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் பாகிஸ்தான் 25.1 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. முகமது ரிஸ்வான் 32 ரன்களுடனும், சல்மான் 5 ரன்களுடனும் களத்தில் இருந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தான் வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை முதல் முறையாக சொந்த மண்ணில் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்