ரஞ்சி டிராபி; தமிழகம் அபார பந்துவீச்சு... ரெயில்வே அணி 229 ரன்களில் ஆல் அவுட்
ரெயில்வே அணி தனது முதல் இன்னிங்சில் 229 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.;
Image Courtesy: @TNCACricket
அகமதாபாத்,
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இதன் 5வது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கின. இதில் தமிழக அணி ரெயில்வே அணியை எதிர்கொண்டு ஆடி வருகிறது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று தொடங்கிய இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ரெயில்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரதம் சிங் மற்றும் விவேக் சிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பிரதம் சிங் 1 ரன்னிலும், விவேக் சிங் 6 ரன்னிலும் அவுட் ஆகினர்.
தொடர்ந்து களம் இறங்கிய சூரஜ் அஹுஜா (52 ரன்), முகமது சைப் (60 ரன்), பார்கவ் மேராய் (53 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய வீரர்கள் தமிழக அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதில் சிவம் சவுத்ரி 2 ரன்னிலும், யுவராஜ் சிங் 8 ரன்னிலும், ஆகாஷ் பாண்டே 16 ரன்னிலும், ஹிமான்ஷு சங்வான் 18 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் ரெயில்வே அணி தனது முதல் இன்னிங்சில் 229 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டும், குர்ஜப்னீத் சிங், சோனு யாதவ், லக்சய் ஜெய்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகம் இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. தமிழகம் தரப்பில் ஷாரூக் கான் 11 ரன்னுடனும், ஜெகதீசன் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.