டி20 கிரிக்கெட்: இந்திய அணிக்கு எதிராக முதல் வீரராக அரிய சாதனை படைத்த ஷா பைசல்

இந்தியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஷா பைசல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.;

Update:2025-09-20 08:13 IST

அபுதாபி,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - ஓமன் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 56 ரன்கள் அடித்தார். ஓமன் தரப்பில் ஷா பைசல், ஜிதன் ராமநந்தி, ஆமிர் கலீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஓமன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்றது. ஓமன் அணியில் அதிகபட்சமாக ஆமீர் கலீம் 64 ரன்களும், ஹம்மது மிர்சா 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஹர்திக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்தபோது 2-வது ஓவரை ஓமன் வேகப்பந்து வீச்சாளர் ஷா பைசல் வீசினார். அந்த ஓவரில் ரன் எதுவும் விட்டுக்கொடுக்காத அவர் சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக பவர்பிளேயில் விக்கெட் கைப்பற்றிய முதல் அசோசியேட் (உறுப்பு நாடுகள்) பந்து வீச்சாளர் என்ற அரிய சாதனையை படைத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்