இது என்ன நியாயம்..? இந்திய தேர்வுக்குழுவை விமர்சித்த வாஷிங்டன் சுந்தரின் தந்தை
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் சதமடித்து அசத்தினார்.;
image courtesy:BCCI
சென்னை,
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் (150 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (141 ரன்) சதம் அடித்தனர்.
311 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து இருந்தது. கே.எல். ராகுல் 87 ரன்களுடனும், சுப்மன் கில் 78 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த சூழலில் நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 137 ரன்கள் எடுத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் ராகுல், சுப்மன் கில் தொடர்ந்து பேட் செய்தனர். இருவரும் பொறுமையான ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் ராகுல் 90 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல்-சுப்மன் கில் இணை 188 ரன்கள் திரட்டியது.
இதைத்தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் வந்தார். நிலைத்து நின்று ஆடிய கேப்டன் சுப்மன் கில் 228 பந்துகளில் தனது 9-வது சதத்தை எட்டினார். நடப்பு தொடரில் அவர் அடித்த 4-வது சதம் இதுவாகும். சதம் அடித்த சற்று நேரத்தில் சுப்மன் கில் (103 ரன்கள்) அவுட்டானார்.
அடுத்து ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்தார். இருவரும் விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்ற நோக்குடன் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். அதேநேரத்தில் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கும் ஓடவிட்டனர். இந்த ஜோடியில் ரவீந்திர ஜடேஜா, ஹாரி புரூக் பந்து வீச்சில் சிக்சர் தூக்கி தனது 5-வது சதத்தை கடந்தார். அடுத்த ஒரு ஓவர் கழித்து வாஷிங்டன் சுந்தர் தனது முதல் சதத்தை எட்டினார். அத்துடன் ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது.
இந்த போட்டியில் இந்திய அணி டிரா செய்ததற்கு வாஷிங்டன் சுந்தரின் பொறுப்பான ஆட்டம் மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது. சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி வரும் தமிழக ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர், இந்திய அணியின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாக அறியப்படுகிறார். இருப்பினும் அவருக்கு அணியில் நிலையான இடம் இன்னும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தன்னுடைய மகன் சிறப்பாக செயல்பட்டாலும் அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக வாஷிங்டன் சுந்தரின் தந்தை எம்.சுந்தர், இந்திய தேர்வுக்குழுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "வாஷிங்டன் சுந்தர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும், மக்கள் அவரது ஆட்டத்தை மறந்துவிடுகிறார்கள். மற்ற வீரர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் என் மகனுக்கு மட்டுமே அவை கிடைப்பதில்லை. 4-வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சைபோல் 5-வது இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்புகளை வாஷிங்டன் தொடர்ச்சியாக பெற வேண்டும். ஆச்சரியப்படும் விதமாக, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் என் மகன் தேர்வு செய்யப்படவில்லை. இந்திய தேர்வாளர்கள் அவரது ஆட்டத்தைப் பார்க்க வேண்டும்.
என் மகன் 1-2 போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் கூட நீக்கப்படுகிறான். இது என்ன நியாயம்?. இங்கிலாந்துக்கு எதிராக 2021-ம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் வாஷிங்டன் ஆட்டமிழக்காமல் 85 ரன்களையும், அகமதாபாத்தில் 96* ரன்களையும் எடுத்தார். அந்த 2 இன்னிங்ஸ்களும் சதங்களில் முடிந்திருந்தாலும் கூட அவர் நீக்கப்பட்டிருப்பார். வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கும் இதுபோன்ற அணுகுமுறை பின்பற்றப்பட்டிருக்கிறதா? இதற்கெல்லாம் பிறகு அவர் மிகவும் வலிமையானவராகிவிட்டார். அதன் விளைவைத்தான் மக்கள் இப்போது பார்க்கிறார்கள்" என்று கூறினார்.