முகமது ஷமியை அணியில் எடுக்காதது ஏன்..? அகர்கர் விளக்கம்

முழு உடற்தகுதியுடன் இருந்தும் ஷமியை தேர்வு செய்யாமல் மறுத்து வருவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-10-18 03:15 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் குணமடைந்த அவர் உள்ளூர் தொடர்களில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுத்தார். பின்னர் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார். இருப்பினும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

இதனையடுத்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாத அவர் தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை. இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த அவர் காயம் காரணமாக அவ்வப்போது வாய்ப்பை இழந்து வந்த வேளையில் தற்போது மீண்டும் முழு உடற்தகுதியுடன் இருந்தும் இந்திய அணி அவரை தேர்வு செய்யாமல் மறுத்து வருவது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முகமது ஷமியை அணியில் தேர்வு செய்யாததற்கான காரணம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “முகமது ஷமியை அணியில் எடுக்காதது குறித்து கேள்வி கேட்கிறீர்கள். அவர் இங்கு இருந்தால் பதில் அளித்து இருப்பேன். முழு உடல் தகுதியுடன் இருந்தால், ஷமியை போன்ற சிறந்த வீரரை ஏன் எடுக்காமல் இருக்க போகிறோம். கடந்த 6-8 மாதங்களாக அவருடன், நான் நிறைய முறை கலந்துரையாடி இருக்கிறேன். அதில் அவர் முழு உடல் தகுதியுடன் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் தான் அவர் இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்