மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: புதிய வரலாறு படைத்த மந்தனா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் மந்தனா சதமடித்து அசத்தினார்.;

Update:2025-09-18 08:17 IST

image courtesy:twitter/@BCCIWomen

முல்லாப்பூர்,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்களில் 292 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 117 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் 8 பேர் பந்து வீசினர். இதில் டார்சி பிரவுன் 3 விக்கெட்டும், ஆஷ்லி கார்ட்னெர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனையும் சேர்த்து மந்தனா இந்த ஆண்டில் 3 சதம் அடித்திருக்கிறார். கடந்த ஆண்டில் 4 சதம் எடுத்தார். இதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரு ஆண்டுகளில் மூன்று மற்றும் அதற்கு மேல் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற புதிய வரலாற்று சாதனையை மந்தனா படைத்துள்ளார்.

பின்னர் 293 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 190 ரன்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 20-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்