உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; வெற்றியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்க்ரம் 102 ரன்னுடனும், பவுமா 65 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.;
Image Courtesy: @ICC
லார்ட்ஸ்,
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 138 ரன்னும் எடுத்தன.
தொடர்ந்து 74 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து இலக்கை நோக்கி ஆடி வரும் தென் ஆப்பிரிக்கா நேற்றைய 3ம் நாள் முடிவில் 56 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்க்ரம் 102 ரன்னுடனும், பவுமா 65 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அந்த அணியின் கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. வெற்றியின் விளிம்பில் உள்ள தென் ஆப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வெல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.