ஆசிய குத்துச்சண்டை: ரித்திகாவுக்கு ‘தங்கம்’
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரித்திகா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.;
கோப்புப்படம்
பாங்காக்,
தாய்லாந்தில், 22 வயதுகுட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் மகளிருக்கான 80+ கி.கி., எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரித்திகா 4-1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அசெல் டோக்டாசினை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
மகளிருக்கான 57 கி.கி., பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் யாத்ரி படேல் 2-3 என, உஸ்பெகிஸ்தானின் குமோரபோனு மாமஜோனோவாவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். மற்றொரு இறுதிப்போட்டியில் (60 கி.கி.,) இந்தியாவின் பிரியா 2-3 என சீனாவின் யூ டியானிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 75 கி.கி., பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ், உஸ்பெகிஸ்தானின் ஷவ்கட்ஜோன் போல்டேவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். மற்றொரு இறுதிப்போட்டியில் (90+ கி.கி.,) இந்தியாவின் இஷான் கடாரியா, உஸ்பெகிஸ் தானின் கலிம்ஜோன் மாமாசோலியேவிடம் வீழ்ந்தார்.
முடிவில், 22 வயதுகுட்பட்டோர் பிரிவில் ஒரு தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என 13 பதக்கம் வென்ற இந்தியா 4வது இடம் பிடித்தது. இதன் 19 வயதுகுட்பட்டோர் பிரிவில் இந்தியாவுக்கு 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என, 14 பதக்கம் கிடைத்திருந்தது.