சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: எரிகைசி- பிரணவ் ஆட்டம் ‘டிரா’

3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது.;

Update:2025-08-12 08:04 IST

கோப்புப்படம்

சென்னை,

3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடத்தப்படும் இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 10 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

மாஸ்டர்ஸ் பிரிவில் நேற்று நடந்த 5-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 5-ம் நிலை வீரரான இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, சக நாட்டவரான பிரணவை எதிர்கொண்டார். வெள்ளைநிற காய்களுடன் ஆடிய எரிகைசிக்கு, பிரணவ் கடும் சவால் அளித்தார். இறுதியில் 78-வது நகர்த்தலில் ‘டிரா’வில் முடிக்க ஒப்புக் கொண்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஜோர்டர் வான் பாரஸ்ட் (நெதர்லாந்து) 82-வது நகர்த்தலில் ராய் ராப்சனை (அமெரிக்கா) தோற்கடித்து முதலாவது வெற்றியை பெற்றார். கார்த்திகேயன் முரளி (இந்தியா)- அனிஷ் கிரி (நெதர்லாந்து), விதித் குஜராத்தி (இந்தியா)- வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), அவோன்டர் லியாங் (அமெரிக்கா)- நிஹால் சரின் (இந்தியா) இடையிலான ஆட்டங்கள் டிராவில் முடிந்தது.

5-வது சுற்று முடிவில் வின்சென்ட் கீமர் 4 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அர்ஜுன் எரிகைசி 3 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். இன்றைய முக்கியமான ஆட்டத்தில் எரிகைசி, வின்சென்ட் கீமரை சந்திக்கிறார்.

சேலஞ்சர்ஸ் பிரிவில் நடந்த 5-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கருப்புநிற காய்களுடன் ஆடிய இந்திய வீரர் ஹர்ஷவர்தன் 53-வது நகர்த்தலில் தமிழக வீராங்கனை வைஷாலியையும், அபிமன்யு புரானிக் 39-வது நகர்த்தலில் ஹரிகா துரோணவல்லியையும் வீழ்த்தினர்.

மற்ற ஆட்டங்களான பிரனேஷ்- லியோன் லுக் மென்டோன்கா, ஆர்யன் சோப்ரா- அதிபன், தீப்தயன் கோஷ்-இனியன் ஆகியோரது மோதல்கள் டிரா ஆனது. இதில் அபிமன்யு புரானிக் 4½ புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். இன்று 6-வது சுற்று ஆட்டங்கள் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்