மாநில ஜூனியர் தடகளம்: எஸ்.டி.ஏ.டி. வீராங்கனை தீஷிகா சாதனை
37-வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி மதுரையில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
மதுரை,
மதுரை மாவட்ட தடகள சங்கம் சார்பில் 37-வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி மதுரையில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 110 மீட்டர் தடைஓட்டத்தில் பாடி ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி வீரர் யுவராஜ் 14.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு சந்தோஷ் குமார் 14.24 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டி.என்.ஏ.ஏ. வீரர் விக்னேஷ் 47.58 வினாடிகளில் இலக்கை கடந்து முந்தைய சாதனையை (கடந்த ஆண்டு கோகுல் பாண்டியன் 47.92 வினாடி) தகர்த்ததுடன் தங்கம் வென்று அசத்தினார்.
பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எஸ்.டி.ஏ.டி. வீராங்கனை தீஷிகா 55.51 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம் அவர் முந்தைய போட்டி சாதனையையும் (கடந்த 2017-ம் ஆண்டு வித்யா 55.63 வினாடி) முறியடித்தார்.