பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம்: நயினார் நாகேந்திரன்
நமது சுயசார்பு பாரதக் கனவும் எட்டும் தொலைவில் தான் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மின்னணு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வேலைவாய்ப்பைப் பெருக்கும் விதமாக நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் கொண்டுவரப்பட்ட மின்னணு பாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் (ECMS) கீழ் ரூ.5,532 கோடி முதலீட்டில் 7 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்பிற்குரியது.
அதிலும் 5 திட்டங்கள் மூலம், 77% முதலீட்டைத் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதோடு, தமிழகத்தின் முன்னேற்றத்தின் மீது நமது மத்திய அரசு கொண்டுள்ள அபரிமிதமான அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. சுமார் ரூ.4,200 கோடி முதலீட்டின் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு தமிழகத்தின் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் வீறுநடையிட வழிவகுத்துள்ள நமது பிரதமர் மோடி அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாகத் திகழும் நமது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் வளர்ச்சியில் முனைப்புடன் செயலாற்றும் இத்தகைய திறன்மிக்க மத்திய அரசினால் மின்னணு உற்பத்தியில் தமிழகம் முன்னணி வகிக்கும் நாளும், நமது சுயசார்பு பாரதக் கனவும் எட்டும் தொலைவில் தான் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. என தெரிவித்துள்ளார் .