உத்தமர் போல் நடிக்கும் பிரதமர் மோடி: தி.மு.க. விமர்சனம்


உத்தமர் போல் நடிக்கும் பிரதமர் மோடி: தி.மு.க. விமர்சனம்
x
தினத்தந்தி 15 April 2024 8:52 AM GMT (Updated: 15 April 2024 11:16 AM GMT)

பா.ஜ.க.வின் உடம்பு முழுவதும் ஊழல் மயம்தான் என்று தி.மு.க. தெரிவித்துள்ளது.

சென்னை,

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. ஆட்சி ஊழலை ஒழிக்கும் என மேடைக்கு மேடை முழங்குகின்ற பிரதமர் மோடி பா.ஜ.க.வின் முதுகில் மட்டுமல்ல அதன் உடம்பு முழுவதும் ஊழல் மயம்தான். உத்தம வேடம் போடும் மோடியின் முகத்திரையைக் கிழிக்கும் சில சாட்சிகள்.

வீட்டுக் கடன் ஊழல்

கோவா மாநில பா.ஜ.க.அரசின் தொழில்துறை மந்திரி மகாதேவ் நாயக் கோவா அரசின் எம்.எல்.ஏ.க்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தில் வெறும் 2 சதவீத வட்டியில் ஏற்கனவே உள்ள நிலத்தில் வீடுகளைக் கட்ட அல்லது குடியிருப்பு நோக்கத்திற்காகப் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதற்காக அனுமதிக்கப்படும் நிதியில் புதிய வணிக வளாகங்களை வாங்கிடத் தவறாகப் பயன்படுத்தினார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்.டி.ஐ. ஆவணத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

கும்பமேளா ஊழல் - சி.ஏ.ஜி. வெளிப்படுத்திய ஊழல்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் 2010-ஆம்ஆண்டு கும்பமேளா கொண்டாட மத்திய அரசு ரூ.565 கோடி வழங்கியது. இந்த நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதால் பல வளர்ச்சிப் பணிகள் முடிவடையாமல் பாழானது. சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கை ரூ.180.07 கோடி மதிப்பிலான 54 வளர்ச்சிப் பணிகள் முழுமையடையாமல் விடப்பட்டன என்று கூறி உத்தரகாண்ட் பா.ஜ.க. ஆட்சி ஊழலை வெளிப்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. ஆட்சி ஊழல்

பொது சுகாதாரப் பொறியியல் துறைக்கு நியாயமற்ற விலையில் எல்.இ.டி. பல்புகள் கொள்முதல் செய்யப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதாவது 15 வாட் பல்பு ஒன்று ரூ.15,000, 9 வாட் பல்பு ஒன்று ரூ.972, 12 வாட் பல்பு ஒன்று ரூ.12,000 என வாங்கி ரூ.2 கோடி கொள்ளையிடப்பட்டுள்ளது.

ஐ.எல். மற்றும் எப்.எஸ். ஊழல்

இன்ப்ரா ஸ்ட்ரக்கர் லீசிங் பைனான்சியஸ் சர்வீஸ் நிறுவனம் 31.3.2018 நிலவரப்படி வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் சாதாரண முதலீட்டாளர்களுக்கு 91 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 900 சதவீதம் குறைந்து; அதன் கடன் 44 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்போது கடனைத் திருப்பிச் செலுத்த வழியில்லை. ரேட்டிங் ஏஜென்சிகளால் அதன் பங்கு பயனற்றது என தற்போது வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஐ.எல் மற்றும் எப்.எஸ் நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிய இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி, ஸ்டேட் பேங்க், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அமித்ஷாவின் மகன் ஊழல்

மோடி பிரதமர் ஆன பிறகு இன்றைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவிற்குச் சொந்தமான நிறுவனத்தின் வர்த்தகம் ஒரே ஆண்டில் 16,000 மடங்கு அதிகரித்து அதன் வருவாய் வெறும் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.80 கோடிக்கு மேல் அதிகரித்தது. இத்தனைக்கும் அந்த நிறுவனத்தில் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது

ரபேல் ஊழல்

காங்கிரஸ் தலைமையில் இருந்த ஒன்றிய ஆட்சியின்போது பிரெஞ்சு நாட்டு ரபேல் போர் விமானங்களை வாங்கிடப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. அப்போது ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. மோடி ஆட்சி அமைந்த பின் ரூ.1,660 கோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு 36 விமானங்களின் மொத்த விலை ரூபாய் 60 ஆயிரம் கோடி என முடிவு செய்யப்பட்ட கொடுமை நிகழ்ந்தது.

நீரவ் மோடியின் மெகா ஊழல்

இந்தியாவில் இதுவரை நடைபெறாத மிகப் பெரிய ஊழல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகைக்கடை மற்றும் வடிவமைப்பாளரான நீரவ் மோடிக்கு ரூ.22 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டு நீரவ் மோடியும் அவரது உறவினர் மெகுல் சோக்சியும் கடனை வங்கிக்குச் செலுத்தாமல் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று விட்டனர். இந்த மோசடி தொடர்பாக 2016-ம் ஆண்டிலேயே செபி, அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை ஆகியவற்றுக்குப் புகார்கள் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நீரவ் மோடி 23.1.2018 அன்று வெளிநாட்டில் டாவோஸ் நகரில் பிரதமர் மோடி பங்கேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருடன் மேடையில் வீற்றிருந்தார் என்றால் என்ன அர்த்தம்?. இது எந்த வகை ஊழல் என்று சிந்திக்க வேண்டும் மக்கள் !

பொருளாதாரக் குற்றவாளி விஜய் மல்லையா

சி.பி.ஐ. விஜய் மல்லையாவைத் தேடப்படும் குற்றவாளி என அறிவித்தது. பல வங்கிகளில் அவர் வாங்கிய கடன்களைத் திரும்பச் செலுத்தாமல் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு புனைந்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது பா.ஜ.க.வின் மிகப்பெரிய ஊழல் செயல் அல்லவா !

மோடி - அதானி - அம்பானி ஊழல்

மோடி பிரதமர் ஆனது முதல் உலகில் அவர் செல்லாத நாடுகள் இல்லை எனும் அளவுக்கு எல்லா நாடுகளுக்கும் விமானப் பயணம் சென்றுள்ளார். அப்படி அவர் பயணம் செய்த போதெல்லாம் அவருடன் பயணம் செய்தவர்கள் அதானியும் அம்பானியும். இது உலகம் அறிந்தது. மோடியின் இந்தப் பயணங்களால் பயனடைந்தவர்கள் யார்?. இந்திய மக்கள் அல்ல ! அம்பானியும் அதானியும் தான் !.

பிரதமர் மோடி 2014-ல் ஆஸ்திரேலியா சென்றார். உடன் சென்ற அதானிக்கு அங்கு ரூ.6,200 கோடி மதிப்புள்ள நிலக்கரி ஒப்பந்தம் கிடைத்தது. அடுத்து பிரான்ஸ் சென்றார். அங்கு அம்பானிக்கு ரூ.58,000 கோடி ரபேல் விமான ஒப்பந்தம் கிடைத்தது.

2016-ல் பிரதமர் மோடி ஈரான் சென்றார். அங்கு அவருடன் சென்ற அதானிக்கு சதார் துறைமுக ஒப்பந்தப் பணி ரூ.4000கோடி கிடைத்தது. 2017 பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றார். அப்போது அவருடன் பயணித்த அம்பானிக்கு ரூ.65000 கோடி வான்வழி ஏவுகனை ஒப்பந்தம் கிடைத்தது. அதே ஆண்டில், அடுத்த முறை இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடியுடன் பயணித்த அதானிக்கு ரூ.1,500 கோடி ஆளில்லா விமானத் தயாரிப்பு ஒப்பந்தம் கிடைத்தது. 2018-ல் ஸ்வீடன் நாட்டிற்குச் சென்ற மோடியுடன் பயணித்தவர் அதானி. அங்கு அவருக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கான ஒற்றை என்ஜின் போர் விமானத் தயாரிப்பு ஒப்பந்தம் கிடைத்தது.

அதே ஆண்டில் அம்பானியுடன் பயணித்த பிரதமர் மோடி அவர்களால் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்காவின் 7-வது கடற்படை பராமரிப்பு ஒப்பந்தம் அம்பானிக்குக் கிடைத்தது. இப்படி பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கிடைத்ததே பிரதமர் அவர்களின் இந்தப் பயணங்களால். இந்திய மக்களுக்கு என்ன பயன்?.

இப்படி எண்ணற்ற ஊழல்களின் உறைவிடமாகத் திகழ்பவர் இன்று புதுவேடமிட்டு வருகிறார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! சத்தியம் தவறாத உத்தமர் போல் நடிக்கும் பிரதமர் மோடியின் உண்மையான வேடங்களை பொது மக்கள் அறியட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story