“நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார்.
தமிழ் படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பிரகாஷ்ராஜ். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். 2 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். சமீப காலமாக சமூக அரசியல் விஷயங்கள் குறித்து பிரகாஷ்ராஜ் காரசாரமாக கருத்துகள் வெளியிட்டு வந்தார்.
பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையான விவகாரத்தில் மத அமைப்புகளை கடுமையாக சாடினார். பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜனதா கட்சியினரையும் நேரடியாக விமர்சித்து வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரம் செய்தார்.
இதனால் எதிர்ப்புகளை சந்தித்தார். அவரது வாகனத்தை மறித்து மறியலும் நடந்தது. தொடர்ந்து பிரகாஷ்ராஜுக்கு எதிராக கருத்து மோதலில் பா.ஜனதா கட்சியினர் ஈடுபட்டு வந்தனர். இதனால் அதிருப்தியில் இருந்த பிரகாஷ்ராஜ் திடீரென்று தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். ஒரு புதிய ஆரம்பம். பொறுப்புகளும் கூடி இருக்கிறது. உங்கள் ஆதரவுடன் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை விரைவில் வெளியிடுவேன்” என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவில் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story