‘பொன்னியின் செல்வன்’ நாவல் இணைய தொடர் ஆகிறது சவுந்தர்யா தயாரிக்கிறார்


‘பொன்னியின் செல்வன்’  நாவல் இணைய தொடர் ஆகிறது சவுந்தர்யா தயாரிக்கிறார்
x
தினத்தந்தி 1 Feb 2019 10:00 PM GMT (Updated: 1 Feb 2019 6:49 PM GMT)

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ‘பொன்னியின் செல்வன்’ நாவலை சரித்திர வலை தொடராக தயாரிக்க முன்வந்துள்ளார்.

எழுத்தாளர் கல்கியின் வீர காவியமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக தயாரிக்க முதலில் எம்.ஜி.ஆர். முன்வந்தார். அதில் அவர் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பினார். 

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது. 

சில வருடங்களுக்கு பிறகு, ‘பொன்னியின் செல்வன்’ நாவலை கமல்ஹாசன் திரைப்படமாக தயாரிக்க விரும்பினார். அந்த திட்டமும் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து டைரக்டர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க விரும்புகிறார். இதற்கான ஆரம்பகட்ட பணிகளை அவர் செய்து வருகிறார். 

இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ‘பொன்னியின் செல்வன்’ நாவலை சரித்திர வலை தொடராக தயாரிக்க முன்வந்துள்ளார். 

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘‘பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரசின் சாம்ராஜ்யத்தை பற்றிய இணைய தொடர், இது. வீரமும், விறுவிறுப்பும், காதலும், நகைச்சுவையும் கலந்த காவியமாக இந்த படைப்பு இருக்கும். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படித்த நாள் முதல் எனக்கு இதை காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அதற்கான சரியான நேரம் இப்போது வந்திருக்கிறது’’, என்று அவர் கூறியுள்ளார். 

இந்த இணைய தொடரை தயாரித்து ‘கிரியேட்டிவ் ஹெட்’ ஆகவும் பொறுப்பேற்கிறார் சவுந்தர்யா. டைரக்டர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராக இருந்த சூர்ய பிரதாப் டைரக்‌ஷனில் இந்த இணைய தொடர் உருவாகிறது. இதில் நடிக்கும் நடிகர்– நடிகைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 

Next Story