3 படங்களில் நடிக்க சம்பளத்துக்கு பதில் பங்களாவா? ஜெயம் ரவி விளக்கம்


3 படங்களில் நடிக்க சம்பளத்துக்கு பதில் பங்களாவா? ஜெயம் ரவி விளக்கம்
x
தினத்தந்தி 1 March 2019 11:15 PM GMT (Updated: 1 March 2019 6:51 PM GMT)

ஜெயம் ரவி நடித்த ‘அடங்க மறு’ படம் 2 மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. தற்போது கோமாளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கோமாளி படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படப் பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்து மோகன்ராஜா இயக்கும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படங்களை முடித்து விட்டு ஸ்க்ரீன் சீன் மீடியா பட நிறுவனம் தயாரிக்கும் 3 புதிய படங்களில் தொடர்ந்து நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதனை அந்த பட நிறுவனமும் டுவிட்டரில் தெரிவித்து இருந்தது. இந்த 3 படங்களுக்கும் சம்பளத்துக்கு பதிலாக ஜெயம் ரவிக்கு தயாரிப்பு தரப்பில் சென்னை போயஸ்கார்டனில் ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு பக்கத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள பங்களாவை எழுதி கொடுத்ததாக தகவல் வெளியானது.

முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் போயஸ் கார்டனில் ஜெயம் ரவிக்கு பங்களாவா? என்று வலைத்தளங்களில் பலரும் வியந்து பேசினார்கள். ஆனால் இந்த தகவலை ஜெயம் ரவி மறுத்துள்ளார். போயஸ்கார்டனில் வீடு பெற்றதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்றும், ஒரு தகவலை வெளியிடும் முன் சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் பெற்று வெளியிடுமாறு 2 நாட்களாக பரவிவந்த வதந்திக்கு ஜெயம் ரவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

Next Story