கர்ப்பிணி புகைப்படம் விமர்சித்தவர்களுக்கு சமீரா ரெட்டி பதிலடி


கர்ப்பிணி புகைப்படம் விமர்சித்தவர்களுக்கு சமீரா ரெட்டி பதிலடி
x
தினத்தந்தி 13 March 2019 9:30 PM GMT (Updated: 13 March 2019 5:11 PM GMT)

தனது கர்ப்பிணி தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் கேலி செய்து பதிவிட்டவர்களுக்கு நடிகை சமீரா ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சமீரா ரெட்டிக்கும், தொழில் அதிபர் அக்‌ஷய் வார்தேவுக்கும் 2004-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சமீரா ரெட்டி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். வயிறு பெரிதாகி கர்ப்பிணியாக இருக்கும் தனது தோற்றத்தை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த தோற்றத்தை பலர் கேலி செய்து பதிவிட்டனர். இதற்கு பதிலடி கொடுத்து சமீரா ரெட்டி கூறியிருப்பதாவது:-

“கர்ப்பிணியாக இருக்கும் என்னை கேலி செய்கின்றனர். உங்கள் அம்மாவின் வழியாகத்தானே நீங்கள் இந்த உலகத்துக்கு வந்து இருக்கிறீர்கள். நீங்கள் பிறந்தபோது உங்கள் தாய் கவர்ச்சியாகவா இருந்தார். தாய்மை என்பது இயற்கையானது. அது அழகானது. முதல் குழந்தை பிறந்ததும் உடல் எடையை குறைக்க எனக்கு சில காலம் தேவைப்பட்டது.

அதுபோல் 2-வது குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்குவேன். இந்தி நடிகை கரீனா கபூர் போன்று சிலர் மட்டும் குழந்தை பிறந்ததும் அழகாக காட்சி அளிப்பார்கள். ஆனால் என்னை போன்ற பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு பழைய தோற்றத்துக்கு மீண்டும் உடலை கொண்டு வர சில காலங்கள் ஆகும்”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story