சரிந்த தடுப்பு வேலியை தாங்கி பிடித்து ரசிகர்களை காப்பாற்றிய விஜய்


சரிந்த தடுப்பு வேலியை தாங்கி பிடித்து ரசிகர்களை காப்பாற்றிய விஜய்
x
தினத்தந்தி 13 March 2019 10:45 PM GMT (Updated: 13 March 2019 5:31 PM GMT)

சரிந்த தடுப்பு வேலியை தாங்கி பிடித்து ரசிகர்கள் கீழே விழாமல் விஜய் காப்பாற்றினார்.

விஜய் ‘சர்கார்’ படத்துக்கு பிறகு அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் 2 மாதமாக நடந்து வருகிறது. தினமும் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஏராளமான ரசிகர்கள் கூடுகிறார்கள். காட்டாங்கொளத்தூரில் படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் காரில் புறப்பட்டபோது ரசிகர்கள் பைக்கில் பின்தொடர்ந்தனர்.

அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடக்கூடாது என்று கார் கண்ணாடியை இறக்கி பைக்கில் பின்தொடர்ந்து வரவேண்டாம். பத்திரமாக திரும்பி செல்லுங்கள் என்று அறிவுரை சொன்ன வீடியோ வெளியானது. தற்போது பரங்கிமலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் சில காட்சிகளை படமாக்கி வந்தனர்.

அங்கும் விஜய்யை பார்க்க மாணவ-மாணவிகள், ரசிகர்கள் ஏராளமானோர் கூடினார்கள். முள் கம்பி தடுப்பு வேலிக்கு வெளியே நின்றபடி மகிழ்ச்சியில் குரல் எழுப்பினார்கள். அவர்களை நோக்கி விஜய் கையசைத்துக் கொண்டு நின்றார். அப்போது தடுப்பு வேலி ரசிகர்கள் தள்ளுமுள்ளுவினால் சரிந்து அனைவரும் கீழே விழப்போனார்கள்.

அதை பார்த்ததும் விஜய் எதிரே இருந்த கால்வாயை தாண்டி குதித்து ஓடிப்போய் வேலியை தாங்கிப்பிடித்து ரசிகர்கள் கீழே விழுந்து காயம் படாமல் தடுத்தார். படக்குழுவினரும் பதறியபடி ஓடிப்போய் அவருடன் வேலியை தாங்கினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ரசிகர்களை விஜய் காப்பாற்றிய இந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story