பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை சத்யராஜ், பார்த்திபன், ஐஸ்வர்யா வற்புறுத்தல்


பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை சத்யராஜ், பார்த்திபன், ஐஸ்வர்யா வற்புறுத்தல்
x
தினத்தந்தி 13 March 2019 11:00 PM GMT (Updated: 13 March 2019 5:40 PM GMT)

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமையை திரையுலகினர் கண்டித்து வருகிறார்கள்.

நடிகர் சத்யராஜ் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

“பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை அக்கிரமத்தின் உச்சம். அநியாயத்தின் உச்சம். கொடூரத்தின் உச்சம். இந்த மனித மிருகங்களுக்கு சட்டப்படி உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். இந்த தண்டனையை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். இந்த மிருகங்களை தண்டிக்கத்தான் முடியும். திருத்த முடியாது. ஆனாலும் அடிப்படை கல்வியாக பள்ளியில் மனநல மருத்துவத்தை கற்பிக்க வேண்டும். சட்டப்படியாக உடனடியாக அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மனவலியோடு கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி கூறும்போது, யோசிக்கவே வேண்டாம். நிற்கவைத்து சுடுங்கள். உயிர் பயம் வந்தால்தான் உருப்படுவானுங்க. போட்ருங்க சார் என்று கூறியுள்ளார்.

நடிகர் பார்த்திபன் டுவிட்டரில், “பொள்ளாச்சி சம்பவம் கதி கலங்க செய்தது. இவ்வன்முறை வருடம் ஒரு முறை வந்தது போய் மாதம் இருமுறையும் வாரம் ஒரு முறையுமாய் வருவது நீதிமன்றத்தின் கடுமையாக்கப்பட்ட தண்டனைகளால் மட்டுமே மட்டுப்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

டைரக்டர் சேரன் டுவிட்டரில், “பொள்ளாச்சி சம்பவத்தில் எந்த விதமான அரசியல் தலையீடுமின்றி இளம்பெண்களை சீரழித்த அனைவருக்கும் சட்டப்படி தண்டனை கிடைக்க செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நாம் அரேபிய சட்டத்தை பயன்படுத்தலாம். எது நடந்தாலும் எதிர்த்து போராட அனைத்து பெற்றோர்களும் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “இனியும் நாம் மவுனம் காக்கத்தான் வேண்டுமா? பதில் சொல்ல வேண்டியவர் யார்” என்று கூறியுள்ளார்.

Next Story