பாபிசிம்ஹா மீது மதுபாலா வருத்தம்


பாபிசிம்ஹா மீது மதுபாலா வருத்தம்
x
தினத்தந்தி 2 April 2019 10:45 PM GMT (Updated: 2 April 2019 5:42 PM GMT)

அக்னிதேவி படத்தை தடுக்க முயன்றதால் பாபிசிம்ஹா மீது மதுபாலா கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழில் ரோஜா படத்தில் பிரபலமாகி 1990–களில் முன்னணி நடிகையாக இருந்த மதுபாலா நீண்ட இடைவெளிக்கு பிறகு பாபி சிம்ஹா கதாநாயகனாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த அக்னி தேவி படத்தில் வில்லியாக வந்தார். இந்த படம் சர்ச்சையில் சிக்கியது. படத்தை தடைசெய்யும்படி பாபிசிம்ஹா கோர்ட்டுக்கு சென்றார். 

இதனால் படக்குழுவினர் முதலில் வைத்திருந்த அக்னிதேவ் தலைப்பை அக்னிதேவி என்று மாற்றி திரைக்கு கொண்டு வந்துவிட்டனர். படத்துக்கு எதிராக பாபிசிம்ஹா தொடர்ந்துள்ள வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கமாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து போலீசிலும் புகார் அளித்தது. 

இந்த படத்தின் சர்ச்சைகள் குறித்து மதுபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:–

‘‘நான் அக்னிதேவி படம் சம்பந்தமாக நடக்கும் பிரச்சினைகளை கவனித்துக்கொண்டு இருக்கிறேன். ஒரு நல்ல படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டு இருப்பது வருத்தமாக உள்ளது. இயக்குனர்கள் ஜான் மற்றும் சூர்யாவுக்காக வருந்துகிறேன். எனது சினிமா வாழ்க்கையில் நான் நடித்ததில் சிறந்த படம் இதுதான். சிறந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்து இருந்தார்கள். இதை பெரிய ஆசிர்வாதமாக கருதுகிறேன். இந்த படத்தின் இயக்குனர்கள் ஜான், சூர்யா ஆகியோருக்கு ஆதரவாக இருப்பேன்.’’

இவ்வாறு மதுபாலா கூறியுள்ளார். 

பாபிசிம்ஹா பெயரை அவர் குறிப்பிடவில்லை. படத்தை தடுக்க முயன்றதால் பாபிசிம்ஹா மீது மதுபாலா கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story