போராளிகளாக என்.டி.ஆர்.- ராம்சரண்


போராளிகளாக என்.டி.ஆர்.- ராம்சரண்
x
தினத்தந்தி 6 April 2019 2:15 AM GMT (Updated: 5 April 2019 10:40 AM GMT)

மிக பிரமாண்டமான காட்சியமைப்புகளால் உலக அளவில் பேசப்பட்ட திரைப்படம் ‘பாகுபலி.’

எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையையும் செய்தது. இதையடுத்து ராஜமவுலி இயக்கத்தில் வரும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது. ‘மகதீரா’ படம் மூலம் ராம்சரண், ‘ஸ்டூடன்ட் நம்பர்1’, ‘சிம்ஹாத்ரி’ மற்றும் ‘எமதொங்கா’ ஆகிய படங்களின் மூலம் ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவருக்கும் திருப்புமுனையைக் கொடுத்தவர் ராஜமவுலி. அவர்கள் இருவரையும் தன்னுடைய அடுத்தப் படத்தில் இணைத்த ராஜமவுலி, அந்த படத்தில் தற்காலிகமாக ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்று பெயரிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் நடைபெறுவதாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கோமரம் பீம் என்ற கதாபாத்திரத்தில், பழங்குடியின மக்களுக்கான நியாயம் கேட்டு போராடும் தலைவராக ஜூனியர் என்.டி.ஆரும், பிரிட்டீஷாரை எதிர்த்து கலகத்தில் ஈடுபடும் அலுரி சீதாராம ராஜூ என்ற கதாபாத்திரத்தில் ராம்சரணும் நடிப்பதாக தகவல்கள் வெளியாயின. ரூ.350 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தை, அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பெரிய பட்ஜெட் மற்றும் பீரியட் படம் என்பதால், சொன்ன நேரத்தில் படத்தை வெளியிட முடியுமா என்பது சந்தேகம்தான். தாமதமானாலும், ராஜமவுலியிடம் இருந்து ஒரு தரமான படம் ரசிகர்களுக்கு கிடைக்கும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.


Next Story