“15 ஆண்டு சினிமா வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள்” -நடிகை தமன்னா


“15 ஆண்டு சினிமா வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள்” -நடிகை தமன்னா
x
தினத்தந்தி 5 April 2019 10:30 PM GMT (Updated: 5 April 2019 5:41 PM GMT)

தமன்னா நடித்துள்ள தேவி-2, தெலுங்கில் நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வருகின்றன. காமோஷி என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார்.

தமன்னா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“திரையில் மட்டுமல்ல படப் பிடிப்பு அரங்கிலும் எப்போதும் உஷாராக இருப்பது எனக்கு பிடிக்கும். வேலை செய்யும்போது உற்சாகத்தோடு முழு மனதோடு செய்வேன். இதுதான் எனது பலம். செய்கிற தொழில் எதுவாக இருந்தாலும் பலன் பற்றி யோசிக்காமல் இஷ்டத்தோடு செய்ய வேண்டும்.

அப்போதுதான் இரவு வேலை பார்த்தால் கூட சோர்வு ஏற்படாது. எனக்கு நானேதான் பலம். கேமரா முன்னால் திறமை காட்ட வேண்டியது நான்தான். எதிர்மறை எண்ணங்களுக்கு என் மனதில் இடம் இல்லை. அதனால்தான் தைரியமாக இருக்க முடிகிறது. பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவள் நான்.

15 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை பெற்றுவிட்டேன். முன்னணி நடிகையாக இருந்து கொண்டு ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுவதை விமர்சிக்கிறார்கள். வட இந்தியாவில் பெரிய நடிகைகள் ஒரு பாடலுக்கு ஆடுகிறார்கள். தென்னிந்தியாவில் மட்டும் ஒரு பாடலுக்கு ஆடியதும் பட வாய்ப்பு இல்லை அதனால்தான் ஆடுகிறார்கள் என்று பேசுகின்றனர். எனக்கு நடனம் தெரியும். அதனால் விருப்பத்தோடு குத்துப்பாடலுக்கு நடனம் ஆடுகிறேன்.”

இவ்வாறு தமன்னா கூறினார்.

Next Story