பேய் படமான அரண்மனை 3-ம் பாகம் தயாராகிறது


பேய் படமான அரண்மனை 3-ம் பாகம் தயாராகிறது
x
தினத்தந்தி 1 May 2019 11:00 PM GMT (Updated: 3 May 2019 12:24 AM GMT)

தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது.

அஜித்குமாரின் பில்லா படமும் 2 பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படத்துக்கு வரவேற்பு இருந்ததால் தொடர்ச்சியாக அந்த படத்தின் 3 பாகங்கள் வந்துள்ளன.

லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படம் வசூல் குவித்ததால் அதன் மூன்றாம் பாகம் இப்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தியிலும் காஞ்சனா படத்தை அக்‌ஷய்குமார், அமிதாப்பச்சன் நடிக்க ரீமேக் செய்கின்றனர். தனுசின் வேலை இல்லா பட்டதாரி இரண்டாம் பாகம் வந்தது.

விஷாலின் சண்டக்கோழி படம் 2 பாகங்கள் வந்தன. தற்போது இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் ஏற்கனவே 2 பாகங்கள் வந்துள்ளன. இப்போது அதன் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் அவர் இறங்கி உள்ளார். ஏற்கனவே கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தையும் சுந்தர்.சி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஷால், தமன்னா நடிக்கும் புதிய படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். இதன் பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த படம் முடிந்ததும் அரண்மனை 3-ம் பாகம் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. அரண்மனை 2-ம் பாகத்தில் நடித்த திரிஷா, ஹன்சிகா ஆகியோர் 3-ம் பாகத்திலும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story