கனடா குடியுரிமை சர்ச்சை: நடிகர் அக்‌ஷய்குமார் விளக்கம்


கனடா குடியுரிமை சர்ச்சை: நடிகர் அக்‌ஷய்குமார் விளக்கம்
x
தினத்தந்தி 6 May 2019 12:06 AM GMT (Updated: 6 May 2019 12:06 AM GMT)

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்விகள் கேட்டு நேர்காணலில் கலந்து கொண்டார்.

பிரபல இந்தி நடிகரும், ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவருமான அக்‌ஷய்குமார் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்விகள் கேட்டு நேர்காணலில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சியினர் தேர்தல் பிரசாரங்களில் அக்‌ஷய்குமாரின் குடியுரிமை குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

அவர் கனடா நாட்டை சேர்ந்தவர் என்றும் அந்த நாட்டின் குடியுரிமையை பெற்று இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்கள். இதற்கு அக்‌ஷய்குமார் டுவிட்டரில் விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது:-

“எனது குடியுரிமை பற்றி தேவையற்ற ஆர்வம் காட்டுகின்றனர். எதிர்மறையான கருத்துக்களையும் பரப்புகிறார்கள். நான் கனடா நாட்டின் பாஸ்போர்ட் வைத்து இருக்கிறேன் என்பதை ஒருபோதும் மறைக்கவில்லை. மறுத்ததும் இல்லை. ஆனாலும் கடந்த 7 வருடங்களில் ஒரு முறை கூற கனடாவுக்கு செல்லவில்லை என்பதுதான் உண்மை.

நான் இந்தியாவில் வேலைபார்க்கிறேன். இங்குதான் எனது வருமான வரியை செலுத்துகிறேன். இந்தியாவுக்கு நான் தேசப்பற்றுடன் இருப்பதை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு வந்தது இல்லை. குடியுரிமை பிரச்சினையில் தேவையில்லாமல் எனது பெயரை இழுத்துள்ளனர். எனது சொந்த விவகாரம் மற்றும் சட்டப்பூர்வமான அரசியல் சார்பற்ற விஷயங்களை சர்ச்சையாக்குகின்றனர். இந்தியாவை வலிமையாக மாற்றுவதில் எனது பங்களிப்பை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்.” இவ்வாறு அக்‌ஷய்குமார் கூறியுள்ளார்.

Next Story