நடிகர்கள், இயக்குனர்கள் மீது நடிகை சமீரா ரெட்டி புகார்


நடிகர்கள், இயக்குனர்கள் மீது நடிகை சமீரா ரெட்டி புகார்
x
தினத்தந்தி 8 May 2019 10:15 PM GMT (Updated: 8 May 2019 9:47 PM GMT)

நடிகர்கள், இயக்குனர்கள் மீது நடிகை சமீரா ரெட்டி பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.


தமிழில் கவுதம் மேனன் இயக்கி சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமீரா ரெட்டி. மீண்டும் அவர் இயக்கத்திலேயே ‘நடுநிசி நாய்கள்’ படத்திலும் நடித்தார். அஜித்குமாரின் அசல் படத்திலும் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். பின்னர் அக்‌ஷய் வர்தே என்ற தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் படங்களில் நடித்தபோது தன்னை சிலர் படுக்கைக்கு அழைத்ததாக சமீரா ரெட்டி பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு வெளியேறி விட்டேன். எதற்காக நடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு விலகினேன் என்பதை தெரிந்துகொள்ள ஒருவர்கூட ஆர்வம் காட்டவில்லை. இதனால் திரையுலகமே இப்படித்தான் என்று முடிவு செய்துகொண்டேன்.

சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலைகள் ஒருபோதும் இருந்தது இல்லை. என்னை பல தடவை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் படுக்கைக்கு அழைத்து இருக்கிறார்கள். நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் கூட படுக்கைக்கு அழைத்தனர். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளன. இந்த நிலைமை மாற வேண்டும். ஆனால் அது மெதுவாகத்தான் நடக்கும்.” இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.


Next Story